Wednesday, December 31, 2008

எங்கள் சுட்டி


குழந்தை வாய்ப்பேச பத்து மாதம்
ஆகும் என்கிறது அறிவியல்,
எங்கள் சுட்டி உரையாடுகிறான்
நான்காம் மாதத்திலேயே!

கவனிக்காதிருந்தால் நம்மை அழைப்பதும்
அருகில் சென்று வினாவினால்-
படுத்திருந்தது போதும் என்னை
மேலே தூக்கிக்கொள் என்பான்,
தூக்கியபின் வீட்டை சுற்றிக்காட்டு என்பான்,
நில்லாமல் நடந்துகொண்டே இருக்கவைப்பான்,
கை ஓய்ந்து படுக்கவைத்தால்
சுற்றியது போதாதென்பான்.
பசி என்பான், தூங்கவை என்பான்.
இன்னும் பல பேசிக்கொண்டே இருக்கிறான்,
முகபாவம் என்பதையே மக்கள் மறந்து வாழும்போது -
சந்தோசம், சிணுங்கல், சிரிப்பு, கொஞ்சல்,
கெஞ்சல், கோபம், அழுகை
என முகபாவங்களை தெளிவாகக்
காட்டிப் பேசுகிறான் எங்கள் சுட்டி.
நம்மிடம் மட்டுமல்லாது, விளையாட்டு
பொருட்களையும் நண்பனாய் பாவித்து பேசுகிறான்.

அனைத்தும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அல்ல,
குழந்தைகளால் மட்டுமே பேசக்கூடிய
அந்த தெய்வீக மழலை மொழியில்!





Monday, December 29, 2008

ஒரு கவளம்




நீ தட்டு நிறைய வகை வகையாக
பரிமாறிய உணவு நாவிற்கு மட்டும் சுவை;
ஆனால், கையில் கொடுத்த ஒரு கவளம்
மனதிற்குள் இனித்தது, திகட்டுமளவு!


Sunday, December 28, 2008

புத்தாண்டு நினைவுகள்

மார்கழிக் குளிர்
தெருக்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்
சென்னையில் "கலை" நிகழ்ச்சிகள் களைகட்டுதல்
தேய்பிறையில் டிசம்பர் மாதம்
இவை அனைத்தும் நமக்கு சொல்வது
ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று.
புது வருடம் நமக்காக இன்பமும், துன்பமும்,
மர்மங்களும், மாற்றங்களும்,
பழைய வினாக்களுக்கு விடைகளும்
மேலும் பல புதிய வினாக்களையும்
தாங்கி வந்து கொண்டிருக்கிறது.


ஆங்கிலப் புத்தாண்டுகளை வரவேற்பதில் பலருக்கு பல கருத்துக்கள். என்னைப் பொறுத்தவரை ஆங்கில காலண்டர்'ஐயே நாம் பெரும்பாலும் உபயோகிப்பதால், ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதில் தவறில்லை.

வரும் Dec'31 இரவில் என்ன செய்யப் போகிறோம் என சிந்திக்கும் முன், இதுவரை எனைக் கடந்த புத்தாண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம், யாருடன் எங்கு கொண்டாடினோம் என நினைவலைகளை புரட்டிப் பார்த்து அசைபோட்டுப் பார்த்தேன். ஒருவித மகிழ்வைத்தந்தது. அவற்றுள் குறிப்பிடும்படியான நிகழ்வுகள் மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

1992
என் நினையு சரியாக இருப்பின், புத்தாண்டு இரவு கேக் சாப்பிட்டு கொண்டாடியது 1992 க்குத்தான் (அப்போ நாங்க SSLC !). என்னுடைய அண்ணன்னும் ஒரு நண்பரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்க்க சைக்கிளில் சென்றனர். ரோட்டில் கத்திக்கொண்டும் கலாட்டா செய்தும் செல்பவர்களை, காவலர்கள் லத்தியால் அடித்து விரட்டியதைப் பார்த்து, நல்ல பிள்ளையாக திருப்பூர் டவுன் ஹால் எதிரிலுள்ள சுகன்யா பேக்கரியில் ஹனி கேக் வாங்கிக்கொண்டு பத்திரமாய் வீடு திரும்பினர்.
இதில் நான் செய்தது கேக்'ஐ சாப்பிட்டது மட்டுமே..ஹிஹி.!! (யாரு, கூட்டமா கிளம்பி வர்றது...வேணாம்..!)



1998
வீட்டிற்கு வெளியில் சென்று நான் கொண்டாடிய முதல் புத்தாண்டு!

திருப்பூரிலிருந்து 20 கி.மி. தொலைவில் உள்ள கொடுவாயில் இருக்கும் நண்பனின் இடத்தில் கொண்டாடுவதென அழைத்துச் சென்றார்கள்.
ஊருக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றோம். தோட்டத்தின் நடுவே இருந்த சிறு வீட்டின் மும்பு காரை நிறுத்திவிட்டு காத்திருந்தோம் (இருட்டுக்குள்ள என்னதாண்டா செய்யப்போறோம்னு எனக்கு யோசனை!!) சிறிது நேரத்தில் மேலும் ஒரு காரில் நண்பனின் நண்பர்கள் வந்திறங்கினர். அறிமுகத்திற்கு பிறகு சட்டென அந்த காரின் டிக்கியை திறந்தனர். அஹா, பார்த்தால் ஒரு மினி பார் அளவிலான அயிட்டங்கள்!! காரில், பாட்டு சத்தமாக போடப்பட்டது, பார்ட்டி ஆரம்பமானது. அவரவருக்கு பிடித்த பானத்தை எடுத்துக் கொண்டனர். நானும் இன்னும் இரு நண்பர்களும் ஜூஸ் மட்டும் எடுத்துகொண்டோம் (ரொம்ப நல்லவனாக்கும், நெசமா!!). கொஞ்சம் கொஞ்சமாக சுருதி (பேச்சில்) ஏறியது, கலாய்ப்புக்களும், கிண்டல்களுமாக நகர்ந்தது. பரோட்டாவும் சிறு பக்கெட்டில் குருமாவும் உணவு! பொறுமையாக தட்டில் போட்டு குருமா ஊற்றி சிலர் சாப்பிட,ஒருவர் பரோட்டாவை எடுத்து.. அப்படியே குருமாவில் முக்கி சாப்பிட்டார் (ஓ..இது சுலபமான வழியா இருக்கே!!).

சிறிது நேரத்தில் நண்பர்களுக்கு சுருதி குறைய ஆரம்பித்தது. சரி, சீக்கிரமாக கிளம்பிவிடலாம் என தோன்றியது. அப்போது ஒருவர் மற்றவர்களிடன் "மச்சான், உனக்கு என்ன வேணும்டா சொல்லு நான் இருக்கேன்.. இந்த செயின் வேணுமா.. இந்தா வச்சுக்க, டேய்..இந்தாடா இந்த மோதிரத்த நீ வச்சுக்க.." என பேசியதோடு நிறுத்தாமல், நிஜமாகவே கழட்டி கொடுத்தார். நாங்களெல்லாம் அவரை சமாதானப்படுத்தி அருகிலிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தோம். கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அமைதிக்குப்பின் புயல் என்பது போல், திடீரென எழுந்தவர், பந்தல் தடுப்பை தாண்டிக் குதித்து ஓடினார். ஓடினவர் கம்பகாட்டுக்குள் நேராக ஓடினார். சிலர் அவரைத் துரத்திக்கொண்டு "அடப்பாவி டேய் அந்தபக்கதாண்ட கிணறு இருக்கு" என கத்திக்கொண்டே ஓடினர். "ஆஹா, புது வருஷம் நமக்கு காவல்நிலயத்துலதான் விடியும் போல" என பயந்தேன். நண்பர்கள் ஓடினவரை பத்திரமாக கொண்டுவந்தவுடன்தான் பயம்விட்டது. அவர்தான் தோட்டத்தின் சொந்தக்காரராம்!! ஏன் ஓடினார் என யாருக்கும் புரியவில்லை.

பார்ட்டி போதும்டா சாமி என கிளம்பினோம்.


மில்லேனியம்
சென்னைவாசியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடையும்நேரம் அது. அதற்குள் சென்னை பல புதிய நண்பர்களை கொடுத்திருந்தது. புத்தாண்டு இரவன்று, கீழ்ப்பாக்கத்தில் இருந்த பில்லியார்ட்ஸ் பாயிண்ட் (Billiards Point) சென்றோம். அங்கேயே, புதுவருட பிறப்பை பார்த்துவிட்டு நண்பர்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிவிட்டு பின்னிரவு இரண்டு மணிக்குமேல் கிளம்பி மெரீனா கடற்கரை சென்றோம். அந்த நேரத்திலும் சோர்வடையாது கூச்சலிட்டு வழ்த்திகொண்டிருந்தனர். வேடிக்கை பார்ப்பதில் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும், காவலர் இருவர் எங்களை நெருங்கி "கிளம்புங்கப்பா நேரமாச்சு, கொண்டாடுனவரைக்கும் போதும், கிளம்புங்க...!!" என்றார். சரி சார்..சரி..சார் "Happy New Year" சார் என்றோம். "எந்த பிரச்சனையும் இல்லாம, இங்க இருக்கிறவங்க பத்திரமா வீடுபோய் சேர்ந்தாதான்ப்பா எங்களுக்கு New Year" என்றார். நெகிழ்வுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

அடுத்த நிறுத்தம், எத்திராஜ் சாலையில் இருந்த சாமியானா ஹோட்டல்! (தற்போது இல்லை)
விடியற்காலை நான்கு மணிக்கு புத்தாண்டின் முதல் உணவாக தோசையும் காபியும்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!


டிஸ்கி 1: ரொம்ப மொக்கை போட வேண்டாம்னு 2000 க்கு மேல எழுதலை.

Saturday, December 27, 2008

துபாய் பஸ் ஸ்டாண்ட் (ஸ்பெஷல்)

நேற்று காலை குடும்ப சகிதமாக துபாயிலுள்ள கோவிலுக்கு சென்றிருந்தோம். இந்நாட்டில் உள்ள ஒரேஒரு ஹிந்து கோவில் துபாய் நகரின் "பர் துபாய்" பகுதியில் இருக்கிறது. குளிரை பொருட்படுத்தாது காலை 6:45 மணிக்கெல்லாம் (ஷார்ஜாவில்) வீட்டை விட்டு இறங்கிவிட்டோம். சொல்லி வைத்தாற்போல் உடனே டாக்ஸி கிடைத்தது. வெள்ளிக்கிழமை ஆதலால் ரோடு காற்று வாங்கியது, பத்து நிமிடத்திற்குள் துபாய் நகரத்தினுள் இருந்தோம் (மாற்ற நாட்களில் இரண்டு மணிநேரம் ஆகுமாக்கும்!!). வழியில் மணிக்கூண்டில் வெப்பநிலை 15 டிகிரீ என்றது.

மணிக்கூண்டு (The popular Clock Tower)



கொசுறு: இருபது வருடத்திருக்கு முன் இப்படி இருந்தது ஓட்டுனரிடம் துபாய் அருங்காட்சியகத்திற்கு போகச்சொன்னோம். அதன் அருகில் கோவில் அமைத்துள்ளது. ஒரு கட்டிடத்தில் கிருஷ்ணர் கோவில் மற்றுமொரு கட்டிடத்தில் சிவன் கோவில் மற்றும் சீக்கியர் கோவில், அனைத்தும் வட இந்திய வழிமுறைப்படி இருக்கிறது.

இப்படியாக கோவிலுக்கு சென்றோம் வணங்கினோம். (பட் மேட்டர் என்னன்னா..)
அங்கே நம் பெரிய கவுண்டரை (பெ.) பார்த்தோம். அவருடன் இருந்த நேரத்தில் நிகழ்ந்தவை கீழே தொகுத்துள்ளேன்.

பெ.: "ஏனுங்க தம்பி நீங்க கோயம்பத்தூருங்களா" (கேட்டுக்கொண்டே நெருங்கினார்)

நான்: அட எப்பிடி கண்டுபுடிச்சீங்க?

பெ.: நம்மூர் பசங்கள பாத்தா தெரியாதுங்களா. (நெத்தியில ஒட்டியிருக்கோ?)
மகனுக்கு இங்கதான் வேலை, ரெண்டு வாரம் வந்துட்டு போங்கப்பான்னு நெறைய காசு செலவு செஞ்சு கூட்டீட்டு வந்துருக்கான். அவனுக்கு வேலை அதிகமா அதான் இப்போ வரலை. (அவர் கண்களில் மகனின் பெருமையும், பூரிப்பும் நெகிழ வைத்தது)

(அறிமுகமேலாம் முடிந்தபிறகு...)

பெ.: ஏனுங்க தம்பி நான் ஷார்ஜா போகோணும், இவத்தாலைக்கு இருந்து எப்பிடி போறது?

நான்: நாங்களும் ஷார்ஜா தான் போரோங்க. எங்க கூடவே வாங்க.

பெ.: சரிப்பா, அங்க ஊர்காரன் ஒருத்தன் இருக்கான், பாக்க போறேன்.
ஏனப்பா, கோயில்கிட்ட படகெல்லாம் இருக்குன்னாங்க எங்க?

நான்: கோயிலுக்கு பின்னாடி இருக்குங்க வாங்க போய் பார்த்துட்டு, அந்த பக்கமே உக்கார்ந்து பிரசாதத்தையும் (பூரி + சென்னா மசால்!! ) சாப்பிட்டுட்டு வரலாம்.

சென்ற பின்..

பெ.: அட..என்ன தம்பி, இவ்வளோ பெரிய ஆறு ஓடுது. பாலைவனத்துல எப்பிடிப்பா?
நம்ம பவானி ஆறு அளவுக்கு இருக்கே.

நான்: இது துபாய் கிரீக்'னு (Dubai Creek) சொல்வாங்க. கடல் தண்ணிய ஆறு மாதிரி திருப்பி விட்டிருக்காங்க. துபாய்க்கு அழகு சேர்க்கரதுல இது ரொம்ப முக்கியமானதுங்க.

இந்த சின்ன சின்ன படகாட்டமா இருக்கறதுல, இந்த ஊர்க்காசு ஒரு ரூபா குடுத்த அந்த பக்கமா கொண்டுபோய் விடுவாங்க. இதுக்கு பேரு ஆப்ரா (Abra). அது பத்தாம ஏசி படகு (Water Bus) விட்டிருக்காங்க அதுக்கு நாலு ரூபா.

ஆப்ரா படகுகள்



சொகுசு படகு (Water Bus)
(மேலும் கொஞ்சம் மொக்கை போட்டுக்கொண்டே பிரசாதம் சாப்பிடோம்)


நான்: கிளம்பலாங்களா?
பெ.: சரிப்பா... எப்பிடி போறதுன்னு சொல்லவே இல்ல?

நான்: பஸ்ல தாங்க.

பெ.: ஏனுங்க தம்பி பஸ்ஸா? துபாயில அதெல்லாம் இல்லைனாங்க.

நான்: நல்லாவே இருக்கு, பத்து நிமிஷம் நடந்தா பஸ் ஸ்டாண்ட் வந்துடும்.

(பழைய டெக்ஸ்டைல் மார்கெட் வழியாக நடந்து பஸ் ஸ்டாண்ட் சென்று அடைந்தோம் )





பெ.: பரவாயில்லை ரொம்ப பெருசாதான் இருக்கு. அனா எல்லாம் நம்மூர்க்காரங்களா இருக்காங்க.

நான்: அமாங்க, நம்ம நாட்டுக்காரங்கதான் இங்க அதிகம் வேலைக்கு வராங்க.


நான்: அங்க கடைசீல அடுக்குமாடி பஸ் தெரியுதுங்களா, அதுதான் ஷார்ஜா போற பஸ். ஆளுக்கு ஐஞ்சு ரூபா தான்.

பெ.: அடேங்கப்பா! இவ்வளோ கூட்டமா? ஏம்பா, வரிசைல நின்னா ரொம்ப நேரம் ஆகும் போல. (முழித்தார்!!) பொழுது சாயறதுக்குள்ள வந்து சேரணுமே.

பெ.: எல்லா பஸ்லயும் சன்னல வேற சாத்தீருக்காங்க.. இல்லன்ன துண்டை போட்டு சீட்டு புடிச்சிரலாம்.

(மேலும்..கவலையடைந்தார்)

நான்: கவலைப்படாதீங்க கவுண்டரே! லேடீஸ் கூட வந்தா, வரிசை எல்லாம் நிக்கவேண்டாம்..நேராபோய் ஏறிக்கலாம். அதுவும் எங்க குழந்தை வேற கைல இருக்கு..எங்க கூட வாங்க.

பெ.: அட, இது கூட நல்லாஇருக்கே.





(ஏறிக்கொண்டோம்...பஸ் கிளம்பியது.. இருபது நிமிடத்தில் அவருக்கான இடம் வந்ததும் இறக்கி விட்டோம்)

பெ.க: உங்கள பாத்ததுல சந்தோசம்ப்ப, ஊருக்கு வந்த கண்டிப்பா வீட்டுக்கு வாங்க, தென்னந்தோப்பு இருக்கு எளனி சாப்பிடலாம். (சொல்லிக்கொண்டே இறங்கிச்சென்றார்)


அவரைப்பார்ததில் எங்களுக்கும் சந்தோசம் என நினைத்துக்கொண்டே வீடு சேர்ந்தோம்.

முற்றும்.

டிஸ்கி 1: இதனால சகலமானவர்களுக்கும் அறிவிக்கறது என்னன்னா துபாயில பஸ் ஸ்டாண்ட் இருக்கு..இருக்கு..இருக்கு.!! (அப்ப விவேகானந்தர் குறுக்கு தெரு இருக்கான்னு கேட்டு டார்ச்சர் பண்ணக்கூடாது!).

டிஸ்கி 2: அனா "மீனா" பஜார் இருக்கு. ரொம்ப பிரபலம் கூட. மீனா எப்போ வந்தாங்கன்னுதான் தெரியலை

டிஸ்கி 3: துபாய் உள்ளூர் பஸ், எங்க ஏறி எங்க இறங்கினாலும் ரெண்டு ரூபா தான். ஒரு வாட்டி ரெண்டு மணி நேரம் போனோம்..அதுக்கும் ரெண்டு ரூபா தான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... ரொம்ப நல்லவங்க..!

டிஸ்கி 4: ஆப்ரா படகுல தினமும் முப்பது ஆயிரம் பேர் பயணிக்கறாங்க.
(நம்ம தண்ணியில மிதக்கரா மாதிரி போறது ஒரு தனி சுகம் தான் போங்க)



Thursday, December 18, 2008

ஒரு ஆதங்கம் !

திருந்தவே மாட்டாங்களா?
திரும்பத்திரும்ப கண்முன்னால் விபரீதங்கள் நடந்தாலும் திருந்தவே மாட்டாங்களா?

சமீபத்தில் ஊருக்கு சென்றபோது, கோழிக்கோடு சென்று அங்கிருந்து வாடகைக் காரில் கோவை சென்றேன். கோழிக்கோட்டில் விமானம் இறங்கியவுடன் மகன் பிறந்த செய்தி கிடைத்தது...என் வருகைக்கு காத்திராமல் பிறந்த குழந்தை எப்படி இருக்கும்? தங்கமணி நலமா? என்பது போன்ற ஆர்வத்தில் சென்றுகொண்டிருந்தேன் ( சரி மேட்டருக்கு வர்ர்ரேன்!! )

வழியில்.. ஒரு மாருதி 800 காரை கடந்து சென்றோம். வண்டியின் ஓட்டுனரைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம்? ஓட்டிகொண்டிருந்தது ஒரு பால் வடியும் 10 ~12 வயது சிறுவன்!! அருகில்..அவன் தந்தைபோல, அவரின் மடியில் ஒரு பெண் குழந்தை. பின் சீட்டில் ஒரு சிறுவன் உட்பட மூன்றுபேராவது இருக்கும். அது மாலை ஐந்து மணி. எதிரில் நிறையை பள்ளிமாணவர்கள் வந்தார்கள். இத்தனை பேரையும்வைத்துக்கொண்டு சிறுவன் தன் திறமையை காட்டிகொண்டிருந்தான்.

அவர்கள் மீது எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது (அனா ஒன்னும் பண்ணலை..ஹம்..!! )
என் ஓட்டுனர் சிறிதுநேரம் மலையாளத்தில் அவர்களை திட்டிகொண்டே வந்தார்.!!

அது எவ்வளவு ஆபத்தான விஷயம்? விடை கீழே....


இரண்டு நாட்கள் முன்பு புது-டில்லியில் பத்தாம் வகுப்பு மாணவன் Scorpio காரில், அதுவும் இரவு 12 மணிக்கு மேல், தன் நண்பர்களுன் சென்று எதிரே வந்த காரில் மோதி அதிலிருந்த குடும்பமே இல்லாமல் போனது.

இப்போது சிறுவன் சிறையில்! தந்தையின் பணத்தாலும், செல்வாக்காலும் வெளியில் வந்தாலும் இந்தக்கோர நிகழ்வு அவன் வாழ்க்கை முழுவதும் வருந்த வைக்கும் என்பது நிச்சயம்!!

மேலும் படிக்க கீழே சொடுக்கவும்
http://ibnlive.in.com/news/teen-arrested-in-delhi-road-accident-case/80561-3.html

இதனை தடுக்க வேண்டிய நம் சட்டத்தை பாருங்கள்..கேவலம்!!
http://ibnlive.in.com/news/delhi-road-accident-father-liable-for-3-month-jail/80635-3.html


இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாகி வருவது மிகவும் வருத்தத்திற்குரியது.

என்னதான் வசதி படைத்தவராக இருப்பினும் சிறுவர்களிடம் காரைக் கொடுக்கலாமா?
சிறுவன் கார் ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள் சில அறிவில்லாத பெற்றோர்கள்.
"விபரீதம் நடக்காதவரை இது போன்ற தவறுகள் மகிழ்விப்பது போல் மாயை தரும். அடுத்தவர் அறிவுரை கூட பொறாமையாகத்தான் தோன்றும்."


கார் ஓட்டுவது என்ன கம்ப சூத்திரமா, சிறு வயதிலிருந்து கற்றுக்கொடுக்க?

ஒரு வாரமோ இல்லை ஒரு மாதமோ போதுமே!


சிறு வயதில் கல்வி தவிர விளையாட்டு, இசை என செய்யக்கூடியவை எவ்வளவோ இறக்கிறது. அதை விட்டுவிட்டு பெரியவர்களின் காரியங்களில் இறங்கவைப்பது வீன்வேலைதான். சரி தானே?

சிறுவர்கள்...சிறுவர்களாக வாழட்டுமே!! மிகச்சில வருடங்கள் மட்டுமுள்ள அந்த வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?

Thursday, December 4, 2008

வரம்


சுற்றியுள்ள பொருட்களை கணக்கெடுக்கும்; நிறங்களைத் தேடும் கண்கள்,
காற்றில் மிதிவண்டி சுற்றும் கால்கள்,
வானத்தை தொட எத்தனிக்கும் கைகள்,
நாம் பேசினால் கூடவே தனக்கே உரிய "ங்கா..ங்கா.." ஊ..ஊ..." என
மென்மையான மழலைமொழியில் கூறும் பதில்கள்.

இவை அனைத்துக்கும் மேல் மெய்மறக்க வைக்கும் புன்னகை.

இதெல்லாம் ஏழு மணிநேர ரயில் பயணம் பின் நான்கு மணிநேர விமானப்பயணம் செய்து என் கைகளில் வந்து சேர்ந்த எங்கள் மூன்று மாத குழந்தையிடம் காண்கிறேன்.

தூங்கும் கோணத்திலும், இடது கையை உபயோகிப்பதிலும், ஏன் சோம்பல் முறிப்பதிலும் கூட என்னையே காண்கிறேன்.


உலக அதிசயங்கள் ஏழு என்பர். அனால், நான் ஒன்றே ஒன்று தான் என்பேன். அது, கருவாகி உயிராகி பூமியில் ஜனனம் செய்யும் குழந்தை ஒன்று மட்டும் தான்.


Wednesday, December 3, 2008

துபாய் புதிய விமானநிலையம்

திங்களன்று குடும்பத்தினரை அழைத்துவர துபாய் விமானநிலையத்தின் புதிய Terminal-3 சென்று வந்தேன். Emirates Airlines -க்காக கட்டப்பட்டது, உலகில் ஒரு தனி விமான நிறுவனத்திற்காக கட்டப்பட்ட Terminal -களில் மிகப்பெரியது.

நேரில் பார்த்தபோது மலைக்க வைத்தது.!! அப்போது பதிவுசெய்த புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக.




Tuesday, November 25, 2008

பழக்கூடை

ஐக்கிய அரபு நாட்டில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகம், குறிப்பாக கேரளா மாநிலத்தவர்கள் அதிகமாக வாழ்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் எவ்வளவு சதவிகிதம் இருப்பார்கள்? சமீபத்தில் இதற்கான விடை கிடைத்தது... பார்த்ததும் மலைத்துப்போனேன் !! (அம்மாடியோவ்.. இத்தினி பேரா ??) .

நீங்களும் பாருங்கள்.



உள்நாட்டு மக்களைவிட மூன்று மடங்கு இருக்கிறார்கள். டவுன்பஸ் புடிச்சி வந்துருவாங்களோ!! பழக்கூடையில் இது திராட்சைக்கொத்து (Numbers அதிகமா இருக்கும்ல அதான்!)


--------------==========**********==============-----------------

என்னதான் பொருளாதார பிரச்சினைகள் வந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் வந்தாலும் போனாலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. கண்டிப்பாக!! பொறுமை!! பொறுமை!! அதற்குள் ஆச்சர்யப்படாதீர்கள்.

மக்கள்தொகை வளர்ச்சியில்தான் !! கூடிய விரைவில் சீனர்களை ஓரம்கட்டிவிட்டு முதலிடத்தை அடைந்துவிடுவோம் (ம்க்கும்... இதெல்லாம் அரைச்ச மாவுதானே என்ன புதுசு??) !!

அந்த சாதனையோடு பார்வையற்றோர் எண்ணிக்கையிலும் முதலிடம் பிடித்துவிடுவோம் என்பது வருத்தத்திற்குரியது. அதைத்தடுக்கும் வழியை நண்பர் நந்தா அனுப்பினார்(அவருக்கு நன்றி!!)
.


இந்தியாவின் மக்கள்தொகை : 110 கோடி

தினமும் பிரப்போரின் எண்ணிக்கை : 86,853

தினமும் இறப்போரின் எண்ணிக்கை : 62,389
பார்வையற்றோரின் எண்ணிக்கை : 6,82,497


இறப்பவர்களின் கண்கள் தானம் செய்யப்பட்டால், வெறும் பத்து நாட்களில் அனைவருக்கும் பார்வை கிடைத்துவிடும். நல்ல விசயம்தானே, உடனே செய்துவிடலாமே.
இவ்வளவு சுலபமா? அதுதான் இல்லை!

கொஞ்சம் அலசினால், பல தடைகள் கண்முன்னே தலைவிரித்தாடும். தானம் செய்யும் வழிமுறைகள் என்ன என்பது, மிகக்குறைவான தொகுதியினருக்கே தெரியும். இது குறித்த சட்டங்கள் என்னென்ன? இருந்தால், ஏதாவது சிக்கல்கள் உண்டா? இவை அனைத்திற்கும் மேல், மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை! "எந்த கடவுளும் பிறருக்கு தானம் செய்வது தவறு எனக்கூறியதில்லை. "


ஹித்தேந்திரனுக்கு பிறகு மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் பற்றிய தெளிவு கூடியிருக்கிறது. இருப்பினும் முழுமையான விழிப்புணர்ச்சி இல்லை. இதற்கு உதாரணம் "சமீபத்தில் உயிருடன் இருக்கும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்ததுதான்".


மருத்துவத்துறையில் இந்தியா வெளிநாட்டவர்கள் கூட தேடிவந்து பார்க்குமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மிகுதியாக உள்ளன. இந்த மருத்துவமனைகள் ஊரெங்கும் விளம்பரப் பலகைகள் மற்றும் சாலை தடுப்புகளில் விளம்பரம் செய்கிறார்கள். இவற்றுடன் உடல் உறுப்பு தானம் பற்றிய வழிமுறைகளையும் சேர்த்து உதவவேண்டும்.

உயிரிழப்பு நிகழும் அந்த கடினமான நேரத்தில் தானத்தைப்பற்றிய நடவடிக்கைகள் செய்வது மிகசிரமான ஒன்றுதான் என்றாலும், அப்படி தானம் செய்வதால் கிடைக்கும் பயனோ மிகவும் பெரியது. பழக்கூடையில் இது பழாப்பலம்.!!
--------------==========**********==============-----------------

அதிகமான் வில்லனாக நடித்துக்காட்டு என யாரைக்கேட்டாலும் உடனே அவர்கையைப் பிசைந்துகொண்டே "டேய் பக்கிரி, டேய் ரங்கா.! எல்லாரும் இங்கவாங்கடா..." என வசனம் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அந்த அளவிற்குபிரபலமானவர் திரு.நம்பியார் அவர்கள். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் இவரை அனைவருக்கும் பிடிக்கும். திரைப்பட நிகழ்வுகள் நிழலா நிஜமா என பிரித்துப்பார்க்க தெரியாத மக்கள், அவர் திரையில் செய்யும் வில்லத்தனத்தைக்கண்டு கண்டபடி திட்டித் தீர்ப்பார்கள். "நம்பியார் கிட்ட புடிச்சி கொடுத்துருவேன், ஒழுங்கா சாப்பிடு" என குழந்தைகளை பயமுறுத்தக்கூட அவரை இழுப்பார்கள். அவற்றை நேரில்கண்ட அனுபவம் எனக்குண்டு.

ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதராகவே வாழ்ந்தார். அவரின் ஐய்யப்ப பக்தி அனைவரும் அறிந்தததே. வருடாவருடம் குருசாமியாக சபரிமலை சென்று வருவார். அவரின் மறைவு, இந்த பழக்கூடையில் பாகற்காய் !!

--------------==========**********==============-----------------





Saturday, November 15, 2008

"சோதனைகள்" ஆயிரம்

ஆயிரம் அல்ல பத்தாயிரம் என்று கூட சொல்லலாம்.

எதனால்? எல்லாம் இன்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு சிறிய முடிவினால் வந்தது.
அப்படி என்ன முடிவு? வாரணம் ஆயிரம் திரைப்படம் பார்க்கச்செல்வது என்பதே!

அந்த மிகச்சிறந்த திரைப்படத்தை பற்றி எழுதாமல் தூங்குவதில்லை என்று 2:40am மணிக்கு மெனக்கெட்டு எழுதுகிறேன்.


ஆரம்பிக்குமுன் திருவாளர், ஆங்கிலத் திரைப்படங்களுக்கு நிகரான படங்களை தந்து பொதுச்சேவையாற்றும் இயக்குநர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு முதற்கண் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ( சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு Frame-லயும் அசத்தரார்யா ???? ).


படம் வெளியான முதல் நாள். ஆதலால், திரை அரங்கிற்கு தொலைப்பேசியில் அழைத்து அமர்விடங்கள் இருக்கின்றன என்பதை உறுதி செய்துகொண்டோம். "காட்சி நேரம்" இரவு 10:30 மணி.



இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டத்தை எதிர்பார்த்து 8:30 மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்று நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டோம். பின்னர் சென்று உணவருந்திவிட்டு சரியான நேரத்திற்கு திரும்பினோம்.

சரியான நேரத்தில் திரைப்படமும் துவங்கியது... ஒரு மணிநேரம் கழித்து அருகிலிருந்த நண்பன் கேட்டான் "மச்சி கதை எப்போ ஆரம்பிக்கும்?" என்று. கதைக்களம் பற்றிய முன்னோட்டம் சொல்வது போலவே காட்சிகள் முடிவில்லாமல் நகர்ந்ததுதான் காரணம்.

திரைப்படத்தில் இல்லாத கதையைபற்றயோ அல்லது ஒவ்வொரு காட்சியாகவோ இங்கே விமர்சிக்க விரும்பாததால் (முக்கியமா தூக்கம் சொக்குது!) பொதுவான கருத்துக்களை மட்டும் சொல்கிறேன்.

திரைப்படத்தின் கரு "தந்தை-மகன்" சொந்தம் பற்றியது என நினைக்கிறேன், அனால் அதற்கான முயற்சி திரைக்கதையில் துளிகூட காணோம்.
திரைப்படமே சூர்யாவின் Fashion Show போல மட்டுமே இருந்தது. பள்ளி மாணவன், நீளமுடி, அழுத்தமாக வெட்டியமுடி, தாடி வைத்த முகம், தாடி வைக்காத முகம், ஒல்லியான உடல், உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய உடல், வயதான உருவம், ராணுவ மேஜர் உடை... இதுபோல இன்னும்பல வேடங்கள். கதை ஏதும் இல்லாததால் இந்த்தனை வேடங்களும், சூர்யாவின் கடும் முயற்சியும் வீண்.

திரைக்கதையை இதற்குமேல் யாரும் குழப்ப முடியாது.. முடியவே முடியாது. ஒரு காட்சிக்கும் அடுத்ததுக்கும் ஒற்றுமையே இல்லை. ஒரு காட்சியில் தந்தைதான் இனி வாழ்க்கை என்கிறார். மறுகணமே புதிய காதல், உடனே போதைக்கு அடிமை. மறுகணம் அடிதடி பின் இராணுவம். (உஸ்ஸ்ஸ்...அப்அப்பா.... இப்பவே கண்ணகட்டுதே!!) இன்னும் நிறைய சொல்லலாம்.

திரைப்படத்தின் நடுவே சகிக்க முடியாத ரசிகர்களின் கதறல்கள் கேட்டன "அய்யா போதும், வலிக்குது விட்டுவிடுங்கள்", "இனிமே சினிமாக்கு கூட்டிட்டு வரவேமாட்டேன்" என்றெல்லாம்.


திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் சூரியாவின் உழைப்பு தெரிகிறது.. ஆனால் அத்தனையும் வீனடிக்கப்பட்டுவிட்டது.

(இல்ல... சும்மாதான் கேக்கிறேன், வருஷக்கனக்குல விழுந்து உருண்டு பிரண்டு படம் எடுக்கிறாங்க, கோடிக்கணக்குல செலவழிக்கிராங்கோ, அநியாயத்திற்கு விளம்பரம் செஞ்சு Hype கொடுக்கறாங்கோ, கதை திரைக்கதையப்பத்தி துக்குணூண்டு கூட யோசிக்கவே மாட்டாங்களா? )

திரைப்படத்தில் ஒரு மிகச்சரியான் வசனம் உள்ளது.. இப்படி மனம்நொந்து படத்தை பார்த்ததற்கு அதுவே மருந்தாகவும் அமையும் "Whatever happens, life has to go on" என்பதே.

இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை.

நன்றி.


Thursday, November 13, 2008

தங்கமணி ஊருக்கு போயிட்டா (எப்படி இருக்கும்) ?


முதலில் Positives பார்ப்போம்.

கேள்வி கேட்க ஆள் இல்லாததால், நன்றாக ஊர் சுற்றலாம். ஓரிரு நாட்கள் வீட்டின்பக்கம் வராமலும் சுற்றலாம். நண்பர்களுக்காக நிறைய நேரம் ஒதுக்கலாம். வீட்டிலேயே பார்ட்டி வைக்கலாம். நமது சமையல் கைவண்ணத்தை நன்பர்களிடம் காட்டலாம். தொலைக்காட்சியில் அறுவை-நாடகங்கள் தவிர்த்து பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கலாம். முக்கியமாக Sports மற்றும் English channels பார்க்கலாம்.

வீட்டில் தனியாக இருப்பதால் சண்டை சச்சரவு ஏதுமின்றி அமைதியாக இருக்கும். அலுவலகத்தில் வேலைநேரம் முடிந்தவுடன் "கிளம்பியாச்சா?" என்ற தொலைப்பேசி அழைப்பு இல்லாதலால் பணிகளை செவ்வனே முடித்து பனி-உயர்வு பெற முயற்சி செய்யலாம்.

இப்படி சிலபல விஷயங்களுக்கு சௌகர்யாம்தான்.


சரி, இனி Negatives என்னவென்று பார்ப்போம்

என்னதான் சந்தோசமாக ஊர் சுற்றினாலும், திரும்பி வந்து வீட்டின் கதவை திறக்கும்போது "யாருமில்லா வீட்டினுள் செல்லத்தான் வேண்டுமா?" என்ற எண்ணம். மீறி செல்லும்போது ஏற்படும் வெறுமையும் கோபமும்.
பணியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவுடன் கிடைக்கும் புன்னகை கலந்த காபி (கிடைக்காது! ). கேண்டினில் சாப்பிடும்போது "பார்த்து பார்த்து செய்து கொடுப்பாளே! திரும்ப வர்ற வரைக்கும் இதுதானா?" என்ற சலிப்பு. அலுவலகப்பணியில் சிக்கலோ அல்லது வேறு கவலை ஏதுமிருந்தால், தோள்சாய்த்து ஆறுதல் கூற ஹூ...கும். தினமும் நிகழும் சிறுசிறு சண்டைகளும், கோபங்களும், ஆறுதல்களும் இன்றி தனிமையில் இருப்பது கொடுமை.

தனிமையிலே இனிமை காண முடியமா? முடியாது என்றே தோன்றுகிறது.

என்னதான் தினமும் இணையத்தின்மூலம் பேசினாலும், செய்திகளைப் பரிமாறிக் கொண்டாலும்...சிரமம் சிரமம்தான்.




உங்களுக்கு தோன்றும் Postives மற்றும் Negatives ஐ பின்னூட்டமிடுங்கள்

நன்றி !

Wednesday, November 5, 2008

சாதனை வாரம்





சைனா (Saina Nahiwal) இந்தியாவின் புதிய சாதனையாளர். ஆந்திரா ஹைதிராபாத் நகரைச்சேர்ந்த, பதினெட்டு வயதேயான இவர் சிறகுப்பந்தாட்ட(Badminton) விளையாட்டில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

மூன்று நாற்கள் முன்பு "World Junior Badminton Championship" போட்டியில் வெற்றிபெற்றார். இத்தகைய போட்டியில் இந்தியர் வெல்வது இதுவே முதல்முறை.

இது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு என்பதாலும், நான் ஓரளவுக்காவது விளையாடிய விளையாட்டு எம்பதாலும் (எதுக்கு இந்த விளம்பரம்??) இந்த செய்திமிகவும் மகிழ்ச்சியை தந்தது.


Gagan Narang :
இவர் சுடுவதில் வல்லவர் (அதில்லப்பா...துப்பாக்கி சுடுற போட்டியில !!).
தாய்லாந்து தலைநகர் பங்காக்கில் நடைப்பெற்ற உலகக்கோப்பைபோட்டியில் கலந்துகொண்டு 10 Metre Air Rifle பிரிவில் வென்று சாதனைசெய்துள்ளார்.

பி.கு இவரும் ஆந்திரா மாநிலம் ஹைதிராபாத் நகரைச்சேர்ந்தவரே !!

ஒருபுறம் ஒலிம்பிக்கில் தங்கம் இப்போது உலகக்கோப்பை !! ( நல்லாத்தான் சுடுறாங்க!! )

சச்சினும் டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தது அனைவரும் அறிந்தசெய்தி.



இவர்கள் அனைவரையும் விட முக்கியமான சாதனையாளர் நம்ம சதுரங்கத்தின் உலக-நாயகன் ( சொல்லலாம்ல?) விஸ்வநாதன் ஆனந்த் தான். ஜெர்மனிநாட்டில் போன் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ருஸ்ய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கை (Vladimir Kramnik) வென்று சதுரங்கத்தில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.

எனக்கு சதுரங்கம் ஆடத்தெரியாது என்றாலும் ஆனந்த் பற்றிய செய்திகளை தேடிப்படிபேன். (ஒரு ஊர்க்காரப்பய பாசந்தான்!!)

ஆகமொத்தம் விளையாட்டை பொறுத்தவரை இந்த வாரம் சாதனை வாரம் !!!.


Monday, October 20, 2008

பிஞ்சு விரல்கள்


  • பௌர்ணமி ஒளியில் கடற்கரை மணலில், தென்றலின் தீண்டலில் நீண்டநேரம் அமர்ந்திருத்தல்.
  • கல்கி அவர்கள் வருணித்த வீர நாராயண ஏரியின் அழகை மீண்டும் மீண்டும் யோசித்து பார்த்து இன்புறுதல்.
  • மாலை நேரத்தில் மழை பெய்யும்போது அம்மா செய்து கொடுக்கும் வெங்காய பஜ்ஜியை சுடச்சுட சாப்பிடுவது.
  • கொடைக்கானலில், சில்லென்ற குளிரில் காலை பொழுதில் நடந்து செல்வது.
  • நண்பர்களுடன் சேர்ந்து விடிய விடிய Age Of Empires விளையாடுவது.
  • அர்த்தராத்திரியில் Ice Cream சாப்பிடுவது.
  • அலுவலகத்தில் Pressure இல்லாத Project மற்றும் குழப்பம் இல்லாத Team அமைவது.
  • வார விடுமுறையன்று பத்து மணிவரை தூங்குவது. தவறி ஆறு மணிக்கு விழித்தால் கோவில் சென்று வருவது.
இது போன்ற நிறைய விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன....





சென்ற மாதம் பிறந்த எங்கள் குழந்தை விஷ்ணுவை காணும் வரை..! அவன் மென்மையான சின்னஞ்சிறிய விரல்களை வருடும் வரை. !


அழுதாலும், தூங்கும் போது முனகினாலும் சந்தோசம் கொடுக்கும் பிஞ்சு குரலை கேற்கும் வரை..!

பிறந்து ஒரு நாள் வரை கையில் எடுக்காமல் பழகியவர்கள் தூக்குவதை பார்த்து கற்றுக்கொண்டு இரண்டாம் நாள் மிக பொறுமையாக என் கையில் எடுத்து அமர்ந்தபோது பொங்கிய சந்தோசம் வரை...!

குழந்தைக்கு முன் மற்ற சந்தோசமெல்லாம் மறந்து போனது எனக்கு.




Tuesday, October 14, 2008

மத்தாளக்கொம்பு நீர் ஊற்று


சமீபத்தில் விடுமுறையில் எங்கள் ஊரான திருப்பூருக்கு சென்றிருந்தேன். அப்போது சிறிய சுற்றுலாவாக கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மத்தாளக்கொம்பு நீர் ஊற்றுக்கு சென்று வந்தோம்.

வழி நெடுகும் இருபுறமும் இருந்த மரங்களும், பசுமை நிறைந்த வயல்வெளிகளும், ஆறுகளும் மற்றும் ஆங்காங்கே இருந்த சிறு குறு வாய்க்கால்களும் மனதிற்கு குளிர்ச்சியை தந்தன. இதை எல்லாம் விட்டுவிட்டு பாலைவனத்தில் ஏன் சென்று வாழ்கிறாய் என கேட்டன.

திரும்பும் வழியில் எனக்கு பன்னீர் சோடா ஆசை வந்தது. கொளப்பலூர் எனுமிடத்தில் நிறுத்தி சில கடைகளை விசாரித்து பின் ஒரு சோடா கடையை கண்டுபிடித்தோம். மிகச்சுவையான பன்னீர் சோடாவை இன்றண்டுமுறை வாங்கி குடித்தும் போதாமல், Aquafina Bottle நிரப்பியும் வாங்கினோம். இனத்துடன் விட்டோமா, Rose மில்க்-கையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் குடித்தபின் இன்னொரு Aquafina Bottle நிரப்பப்பட்டது (அலம்பல் தாங்க வில்லை என்கிறீர்களா?).

மிகவும் மகிழ்ச்சியான அந்த பயணத்தின் புகைப்படங்கள் இங்கே உங்களுக்காக..






எங்கள் ஊரைப்பற்றி ...

தொழில் நகரமான திருப்பூர் மிகவும் சுறுசுறுப்பான ஊர். இரவு பகல் பார்க்காது பின்னலாடை மற்றும் அது சார்ந்த தொழில்களில் உழைக்கும் மக்கள் வாழுமிடம். இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில் 60 சதவிகிதம் தயாரித்து வருடத்திற்கு 10,000 கோடி அளவிற்கு தொழில் செய்யும் நகரம். இங்கே விடுமுறை என வந்துவிட்டால் மக்கள் வீட்டில் இருப்பது அரிது என்றே சொல்லலாம். சிறகை விரித்துக்கொண்டு சுற்றுலா புறப்பட்டுவிடுவார்கள். அதற்கு ஏற்றாற்போல் நகரத்தை சுற்றி நிறைய சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளது. நானும் அப்படி நிறைய முறை சென்றிருக்கிறேன். அனால் இப்பொழுதெல்லாம் திருப்பூருக்கு செல்வதே சுற்றுலாதான்.



Saturday, September 13, 2008

ஓணம் கொண்டாட்டம் - சதயா விருந்து


ஓணம் பண்டிகையை முன்னிட்டு உடன் பணிபுரியும் நண்பர்களுடன் சதயா விருந்து ஏற்பாடு செய்திருந்தோம். பதினாறு உணவு வகைகள் தயார்செய்தோம்.

பாரம்பரிய முறையில் வாழை இலையில் பரிமாறினோம்.

இதோ எங்கள் விருந்தின் புகைப்படங்கள்...






பங்கேற்ற அனைவரும் தமிழர்கள். அண்டை மாநில விழாவாக இருந்தால் என்ன, விழா என்றாலே உற்சாகம் தானாக வரும் அல்லவா. அதனால் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

அயல்நாட்டில் இருந்தாலும் நம் ஊரில் இருப்பது போன்ற உணர்வு அனைவரின் மனதிலும்.


நன்றி

உலகின் வித்தியாசாமான திருவிழாக்கள் - II

இந்த பதிவின் திருவிழா தாய்லாந்து நாட்டில் கொண்டாடப்படுகிறது. அது நமது கலாச்சாராத்தை சார்ந்தது கூட.



1) திருவிழா : குரங்குகளுக்கு உணவளிக்கும் விழா ("Monkey Buffet Festival")
இடம் : "Pra Prang Sam Yot" கோவில், லோப்புரி மாநிலம், தாய்லாந்து.
நாள் : நவம்பர் மாத இறுதியில்
தோன்றல் : தெரியவில்லை.


விழா தினத்தன்று இந்த மிகப்பழமையான இந்து கோவிலின் முன் பலவகை பழங்களும் காய்கறிகளும் குரங்குகளுக்காக மேசைகளிட்டு வைக்கப்படும். குரங்குகள் உணவு உண்பதை விட அவை செய்யும் சேட்டைகளை காண மக்கள் கூட்டம் திரளும். குரங்குகள் கூடியிருப்பவர்களிடம் உள்ள பொருள்களையும் விட்டு வைக்காது. பிடுங்கி உண்பது அவைகளுக்கு குதூகலமான ஒன்று என்பது நாம் அறிந்தததே.


சிலர் விளையாட்டாக பழங்களை பெரிய பனிக்கட்டிக்குள் உறையவைத்து படைப்பர். புகைப்படம்கொடுத்துள்ளேன் பாருங்கள்.


இங்கே படைக்கும் உணவு எவ்வளவு தெரியுமா? சுமார் 2000 கிலோவிற்கும் மேல்.



விழா பற்றிய குறும்படங்கள் கொடுத்துள்ளேன், குரங்குகளின் சேட்டைகளைகண்டு மகிழுங்கள்.





இந்த விழாவைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வருவது பழனி மலை தான்.

எனக்கு மிகவும் பிடித்த திருத்தலம். எங்கள் ஊரிலிருந்து இரண்டரை மணிநேரப்பயணம்தான் ஆதலால் அடிக்கடி குடும்பத்துடன் சென்று வருவோம். புளியோதரையும் தயிர் சாதமும் பாக்கு மட்டையில் கட்டிக்கொண்டுசெல்வோம்.
மலை ஏறும்போது "யானை பாதை"யில் தான் செல்வது வழக்கம். படிக்கட்டுகள் ஏறுவது கடினம் என்பதால் மட்டுமல்ல, யானைப் பாதையில்தான் nஅன்றாக வேடிக்கை பார்க்க முடியும் என்பதால் தான். மலைமேல் இருந்து பழனி நகரத்தையும் அதன்அருகாமையில் உள்ள ஏரியின் அழகையும் ரசிப்போம். வாகனங்களும் மக்களும் மிக சிறியதாகத் தெரியும். ஒவ்வொருவரும் அங்கேபார், இங்கேபார் எனசுட்டிக்காத்ட்இ மகிழ்வர். நாம் இப்போது நாடு விட்டு நாடு பறக்கிறோம் மிக உயரத்தில் இருந்தது உலகை ரசிக்கின்றோம். அனால் அப்போது எங்களுக்கு பழனி மலையேபெரியது.

அதைவிட முக்கியமாக குரங்குகளை யானை பாதையில் அதிகமாக இருக்கும், சேட்டைகளை காண மிக வசதியாக இருக்கும். அவை தாவி விளையாடுவதை காண மகிழ்ச்சியாக இருக்கும். நாம் உண்ணும் பொழுது குரங்குகள் சமயம்பார்த்து காத்திருக்கும், திடீரென பாய்ந்தது தட்டிக்கொண்டு செல்லும். சிலரின் கைப்பைகளைக்கூட உணவுப் பண்டம் என நினைத்து தட்டிச்செல்லும்.

சரி மீண்டும் தாய்லாந்து விழாவுக்கு வருவோம்.
குரங்குகளுக்காக இவ்வளவு பெரிய விழா எதற்க்காக?



திருவிழா வரலாறு:

விஷ்ணுவின் அவதாரமான ராமன் தன்னுடைய நிகரற்ற சீடனான ஹனுமனுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய கொடுத்ததாக மக்கள் நம்புகின்றனர். அதானாலேயே ஹனுமனின் வானர வம்சத்திற்கு ஆண்டு தோறும் மரியாதை செய்யும் விதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.





நன்றி ! விழாக்கள் தொடரும்.

எனது தமிழ்

நான் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழில் எழுதியது மிகக்குறைவு என்றே சொல்லலாம். கணிணியில் ஆங்கிலம் மட்டுமே உபயோகப்படுத்துகிறேன். என்றாவது ஒரு நாள் மற்றும் தமிழ் எழுத்துக்களை கணினித்திரையில் வரைந்து பார்த்து மகிழ்வேன், அதுவும் புதிய தமிழ் மென்பொருள் அல்லது அது சார்ந்த கருவிகள் கண்டால் மட்டும் தமிழ். வெளிநாட்டில் வசிப்பதால் செய்தித்தாளை கூட வலைத்தளத்தில் தான் படிக்க வேண்டும். சென்னையில் வசித்தபோதோ செய்திகளின் தரத்தை கொண்டு "Hindu" மட்டுமே வாங்கிப்படித்தேன். அவ்வப்போது விகடனும் குமுதமும் தமிழ் படிக்க வைத்தன. சென்னையில் இருந்து வீட்டிற்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது அதுவும் தொலைப்பேசி இணைப்பு பெற்றபின் நின்றுவிட்டது. அதன்பின் தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் அறவே இல்லை. அதனால் ஆங்கிலம்.. ஆங்கிலம்...ஆங்கிலம் மட்டுமே எனது எழுத்து மொழியாக இருந்தது.

என்னதான் தினமும் தமிழில் பேசிக்கொண்டிருந்தாலும் சின்னத்திரையும்வெள்ளித்திரையும் பார்த்தாலும் அடிக்கடி எழுதாவிட்டால் நம்மை அறியாமலேயே நம் எழுதும் திறன் குறைந்துவிடும். அதற்கு நானே உதாரணம். ஒரு முறை எங்கள் வீட்டுத் திருமணம் ஒன்றில் காய்கறிகள் பட்டியல் எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. ஓம் வரையும் வரை எல்லாம் நலமே. சமையல்க்காரர் ஒவ்வொரு சாமானாக சொல்லத்துவங்கினார். அவர்சொல்பவை புரிந்தது, ஆனால் என் கை மட்டும் ஏனோ தடுமாறியது. நான்தான் 12 ஆண்டுகள் பள்ளியில் தமிழ் பயின்றவனாயிற்றே எதனால் இந்த தடுமாற்றம் என நினைத்தேன். எப்படியோ சமாளித்து அந்த பட்டியலை முடித்தேன். அடிக்கடி தமிழில் எழுதாவிட்டால் இப்படித்தான்.


அதில் இருந்து என்னை மாறுபடுத்தியது இந்த Blog என்ற ஊடகம் தான். இதன் மூலம் மற்றவர்களுக்கு பயன் உள்ளதோ இல்லையோ, நிச்சயம் எனக்கு உண்டு. எனது தமிழை மறக்காமல் இருக்க உதவுகின்றது. என்னால் முடிந்த அளவு எழுத முயல்கிறேன், காகிதத்தில் இல்லாவிட்டாலும் கணினியிலாவது. மேலும் நான் எழுத்து பிழை செய்யாவண்ணம் இந்த வலைத்தளத்தின் மொழிக் கருவிகள் காப்பாற்றுகின்றன.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறு சிறு பதிவுகள் எழுத முயல்கிறேன்.

என்னதான் ஆங்கிலப்புலமை இருந்தாலும் தமிழில் எழுத முடியவில்லை எனில் நன்றாயிராது. எனவே
நீங்களும் தமிழில் எழுதுவதை விட்டுவிடாதீர்கள்.
நன்றி.